திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவின் போது அன்னதானம் வழங்குவதற்கு சமையல் செய்வதை காவல் துறை தடுத்ததைக் கண்டித்து அய்யாவழி பக்தர்கள் சப்பரங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தியபோது போலீஸாருககும், அய்யாவழி பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் சொக்கலிங்க சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் திருக்கோயில் ஒருசேர அமைந்துள்ளன. இந்த கோயில்களில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பிடையே நீண்ட காலமாக பிரச்சினைகள் இருந்து வருகிறது. நீதிமன்றம் வரை சென்று வழிபாடு நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டு விழாக்கள் நடந்து வருகிறது. இங்குள்ள கோயில்களில் வழிபாடுகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.