
புதுடெல்லி,
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்குவதற்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர், பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது இந்தியாவின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தியதற்கு எம்.பி.க்கள் குழுவினருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கும், அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தக்க பாடம் புகட்டப்பட்டது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றியும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை பற்றியும் உலக நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் விளக்கிக்கூற, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 ்குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுக்களுக்கு பா.ஜனதா கட்சியின் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரசைச் சேர்ந்த சசிதரூர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜா, சிவசேனாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி மற்றும் தேசிவாத காங்கிரசின் சுப்ரியா சுலே ஆகியோர் தலைமை தாங்கினர்.
இவர்கள் தனித்தனி குழுக்களாக அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷியா, எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, குவைத், பக்ரைன், அல்ஜீரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், அரபு நாடுகள், லைபீரியா, காங்கோ, சியரா லியோன், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 33-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றனர். அங்கு அந்த நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர்.
இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததும், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இந்தியா திரும்பினர். பின்னர் அவர்கள் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து தங்களது பயண விவரங்கள் பற்றி கூறினர்.இதையடுத்து அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர், பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
அப்போது அவர்களிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணத்தின்போது நடந்தவற்றை கவனமாக கேட்டறிந்தார். கட்சி பாகுபாடு இன்றி நாட்டின் ஒற்றுமையை அவர்கள் எடுத்துரைத்த விதத்தை பாராட்டினார்.மேலும் குழுவில் இடம் பெற்று இருந்த எம்.பி.க்கள், பிரதமரிடம் அறிக்கைகளை வழங்கினர். பின்னர் பிரதமருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். குழுவில் இடம்பெற்று இருந்த சுமார் 50 எம்.பி.க்களும் பிரதமருடன் தனியாகவும் பேசினார்கள். அவர்களை பிரதமர் தட்டிக்கொடுத்து பாராட்டினார்.