அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்டு

7 hours ago 1

சென்னை,

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக வருகிற 5-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாஜக, தவெக, உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பாரபட்சமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியும். மனுதாரர் பொதுத்துறை செயலாளரிடம் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்க வேண்டும். கட்சியின் பதிவு தொடர்பான ஆதாரத்துடன் பொதுதுறையிடம் இன்றே விண்ணப்பிக்க மனுதாரர் கட்சிக்கு ஆணையிடுகிறோம், என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Read Entire Article