
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது:-
ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பசி பட்டினி, இருட்டு திருட்டு, முறையற்ற நிர்வாகம், மணல் கொள்ளை போன்றவற்றையே தி.மு.க., அ.தி.மு.க. கொள்கையாக கொண்டுள்ளன. அந்த இரு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. அதேபோல் பா.ஜ.க. கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கொடிகளில்தான் வேறுபாடு உள்ளது. கொள்கை வேறுபாடு இல்லை. இவர்களுக்கு மாற்று அவர்களை கூறுவது சரியல்ல. இதை நம்பி ஏமாறுவதுதான் பெருத்த ஏமாற்றம்.
அமலாக்கத்துறை சோதனை வந்ததால்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க செல்கிறார். 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்தாண்டு செல்வது ஏன்? நாட்டில் கோர்ட்டுதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால், சட்டமன்றம் எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? அவற்றை கலைத்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.