சென்னை: வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 1997ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு 1 ஆண்டு சிறையும், எஸ்.சையத் நிசார் அகமத், ஜி.எம்.ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா 2ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். மேலும், மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீட்டுக்காக தண்டனை 1 மாதம் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post அனுமதியின்றி வெளிநாட்டு நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கு ஜவாஹிருல்லாவுக்கு விதித்த தண்டனை உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.