அந்த நாள் ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் - ஜஸ்பிரித் பும்ரா

1 day ago 4

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்சனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வரும் அவர், இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானா பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் அசத்தலாக பந்துவீசி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். தற்போது நடைபெற்று வரும் 18-வது ஐ.பி.எல். தொடரிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஜஸ்பிரித் பும்ரா, மும்பை அணியின் வெற்றிக்காக போராடி வருகிறார்.

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் ஓய்வு குறித்து மனம் திறந்து சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இவ்வளவு காலமாக எந்தவொரு தனிநபரும் எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம். ஆனால் நான் அதை சிறிது காலமாக செய்து வருகிறேன். எனவே நீங்கள் முக்கியமான தொடர் மற்றும் உங்களுடைய உடல் நிலைகளை புரிந்து செயல்பட வேண்டும். உங்களுடைய உடலை பயன்படுத்துவதில் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் முக்கிய தொடர்களை தேர்ந்தெடுப்பதில் சாதூரியமாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கிரிக்கெட்டராக நான் எதையும் விட்டுச் செல்ல விரும்பவில்லை. இந்த நேரத்தில், நான் நன்றாக இருக்கிறேன். எனக்கென்று எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. இதுவரை பயணம் நன்றாக செல்கிறது. இருப்பினும் என்னுடைய பயணம் முடிகிறது அல்லது எனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று உணரும் நாளில் ஓய்வு பற்றிய முடிவை எடுப்பேன்" என்று கூறினார்.

Read Entire Article