
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவருடைய தங்கை மகளான 14 வயது சிறுமி வந்திருந்தாள். சில வாரங்கள் பெரியம்மா வீட்டில் தங்கிவிட்டு பின்னர் அந்த சிறுமி சொந்த ஊருக்கு சென்றாள்.
அப்போது திடீரென சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது தனது பெரியம்மாவின் 3-வது கணவரான பெருமாள்சாமி வீட்டில் யாரும் இல்லாதபோது தன்னிடம் அத்துமீறி நடந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெருமாள்சாமி மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சிறுமியின் பெரியப்பாவான பெருமாள்சாமி மீது போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.