சென்னை: அதிமுகவும் பாஜகவும் இணைந்து தமிழர்களின் வரலாற்றை மறைக்கிறது என எழிலன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்எல்ஏ எழிலன்; 2016ல் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கீழடி அகழாய்வு நிறுத்தப்பட்டது. கீழடி ஆய்வை நிறுத்துங்கள் என்றும் பின்னர் தொடருங்கள் என்றும் ஒன்றிய அரசு கூறியது. இந்திய துணைக்கண்டத்தின் தொடக்கம் கீழடி என்று 2016ல் கலைஞர் கூறினார்.
தமிழர்கள் எந்த அளவு தொன்மையான காலத்தில் இருந்தனர் என்பதை அறிய கீழடியில் அருங்காட்சியகம் உள்ளது. உரிய ஆய்வுக்கு பின்னரே கீழடியில் உள்ள பொருட்களின் வயது கண்டறியப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகம் அமைத்தது திமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் கீழடியில் கிடைத்த பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. கீழடி அகழாய்வுக்கு ரூ.105 கோடி ஒதுக்கியதாக அதிமுக கூறுவது பொய். கீழடி அகழாய்வுக்கு அதிமுக வெறும் ரூ.1 கோடிதான் ஒதுக்கியது. 2016 – 2021 வரை 2 தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே அதிமுக நிதி ஒதுக்கியது. திமுக ஆட்சியில் 38 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன.
திமுக ஆட்சியில் அகழாய்வுப் பணிகளுக்காக ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து தமிழர்களின் வரலாற்றை மறைக்கிறது. கீழடி விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர். 2,440 பானைகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழர்கள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கி உள்ளனர். தொன்மை தன்மையை அறிவியல்பூர்வமாக வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கீழடியில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்த பின் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டன. கீழடி ஆய்வுகள் அறிவியல்ரீதியாக உறுதி செய்யப்பட்டள்ளன. கீழடியின் தொன்மையை ஒத்துக் கொள்ள ஒன்றிய அரசை எது தடுக்கிறது? ஆய்வில் சந்தேகம் இருந்தால் ஒன்றிய அரசு மீண்டும் ஆய்வு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
The post அதிமுகவும் பாஜகவும் இணைந்து தமிழர்களின் வரலாற்றை மறைக்கிறது: எழிலன் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.