கோவை : அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளராகவும், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் கோவையை சேர்ந்த அப்துல் ஜப்பார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில், இஸ்லாமிய மக்களுக்கு நிறைய காரியங்கள் செய்தும், அவர்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போடாமல், திமுகவுக்கு வாக்களித்ததாக பேசினார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுக நிர்வாகி அப்துல் ஜப்பார், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியுடன் பேசும் ஆடியோ வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில், “அதிமுகவுக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை என்பது 100% உண்மை. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோதும் இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்ட போதும் இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை. 2021 தேர்தலில் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்டபோது கரும்புக்கடை பூத்தில் 1,600 வாக்குகளே பதிவாகின. அதே நேரத்தில் திமுகவுக்கு 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவானது. 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை, அப்போதும் 1,200 ஓட்டுதான் பதிவாகி இருந்தது. பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியில் வந்து, நடந்த 2024 தேர்தல் முடிவு அதிமுகவிற்கு மிக மோசமாக இருந்தது. கூட்டணியின்றி யாரும் வென்றது இல்லை; எனவே பாஜகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினேன். கோவையில் கட்சிக்கார இஸ்லாமியர்களே அதிமுகவுக்கு வாக்களித்தனர், வேறுயாரும் வாக்களிக்கவில்லை.”இவ்வாறு தெரிவித்தார்.
The post அதிமுகவுக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை என்பது 100% உண்மை : அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.