அதிமுகவின் ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம்: எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

3 hours ago 1

சென்னை: அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் 140வது வார்டில் 1.54 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு சென்னையில் மழைநீர் எந்த பகுதிகளில் அதிக அளவில் தேங்குகிறது என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது, மேலும் சில பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் கோடம்பாக்கம் மண்டலத்தில் 140வது வார்டில் 5.10 கோடி ரூபாய் மதிப்பில் 1.54 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைத் தொடங்கப்பட்டு உள்ளது. வரும் பருவமழைக்கு மழைநீர் தேங்காது அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம் . பொய்யான பொருந்தாத காரணங்களை சொல்லி மதுரவாயல் துறைமுகம் பாலத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்தப் பாலம் அமைந்திருந்தால் கலைஞருக்குப் பேர் போய் சேர்ந்துவிடும் என்பதால் கலைஞருக்கு அந்தப் பெயர் போய் சேரக்கூடாது என்று அந்த பாலத்தை தடுத்து நிறுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி அந்த பாலத்தை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேறியது என்று எப்படி சொல்கிறார் எடப்பாடி. 2017ம் ஆண்டு தான் உதய் மின் திட்டத்தில் இணைந்தார்கள் அதனால் தான் மின்கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. 2017 ம் ஆண்டு எடப்பாடி நீட் தேர்வுக்கு ஒப்புதல் கொடுத்தார் அதனால் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு திட்டத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நகலெடுத்து செய்வது மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக கனடா இலங்கை போன்ற நாடுகள் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துகிறது.அரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்கள் நகல் எடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது, கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தற்பொழுது முதல்வர் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் என்று மக்கள் அறிவார்கள் இதை மறைக்க எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் எத்தனை ஜமகாலங்களை கொண்டு வந்தாலும் மூட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவின் ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம்: எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article