
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"எப்போது அ.தி.மு.க.வுடன் பாஜக கூட்டணி அமைந்ததோ அப்போதே முதல்-அமைச்சருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. தோல்வி பயம் வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தில் 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார். தினசரி இதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது. போதைப்பொருள்கள் நடமாட்டம் உள்ளது. இதை மறைப்பதற்காக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. இன்று தி.மு.க. அரசு வெகுஜன மக்களின் விரோத ஆட்சியாக உள்ளது.
நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். முதலமைச்சருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி பேச வேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை."
இவ்வாறு அவர் கூறினார்.