கோவை: அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: ஜூன் 22 மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், அறுபடை வீடுகளும் அலங்காரம் செய்து வைக்கப்பட உள்ளது.
இதற்கான கால்கோள் விழா மே 28ல் (இன்று) நடைபெறும். நகைக்கடன் தொடர்பான புதிய நிபந்தனைகளை தளர்த்த எல்லோரும் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சருக்கு கூறி, நிபந்தனைகளை இலகுவாக்க செய்வோம். ஒன்றிய அரசு ஆண்டுதோறும் கொடுக்கும் கல்விக்கான பணத்தை கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
என்னை பொருத்தவரை யாராக இருந்தாலும் சாதி பெயர் இருப்பது கட்டாயம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவிடம் அண்ணாமலைக்கு சீட் கேட்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘ராஜ்யசபா தேர்தல், கூட்டணி குறித்து தனிப்பட்ட முறையில் நான் சொல்ல முடியாது. இதனை தலைமை முடிவு செய்ய வேண்டும். எங்களிடம் 4 எம்எல்ஏ சீட் உள்ளது. இந்த தேர்தலில் தலைமை அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க கூறினால், ஆதரவு தருவோம்’’ என்றார்.
The post அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலைக்கு சீட்?நயினார் நாகேந்திரன் பதில் appeared first on Dinakaran.