அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு எதிரொலி வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு: இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை

23 hours ago 3

சென்னை: அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவை அடுத்து வால்பாறை சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை (தனி) தொகுதியின் அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) கடந்த சனிக்கிழமை (21ம் தேதி) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அமுல் கந்தசாமி மறைவையொட்டி, வால்பாறை சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவையொட்டி வால்பாறைக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.  இதுகுறித்து தமிழக தேர்தல் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறக்கூடிய சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் வால்பாறை தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனால் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை.

தமிழக சட்டமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே 9ம் தேதி வரை உள்ள நிலையில், இந்த ஆண்டு மே மாதம் 10ம் தேதி முதல் ‌அடுத்த ஆண்டு மே 9ம் தேதி வரை ஒரு தொகுதி காலியானால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது’’ என்றார். அமுல் கந்தசாமி மறைவால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 65 ஆக குறைந்துள்ளது.

The post அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு எதிரொலி வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு: இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை appeared first on Dinakaran.

Read Entire Article