மதுக்கரை: அதிகாரிகள் சொல்லியும் கேட்காமல் பழுதான தொகுப்பு வீட்டில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். கோவை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது, குறிப்பாக கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள, மாவுதம்பதி, சின்னாம்பதி, புதுப்பதி,முருகன்பதி, நவக்கரை, பிச்சனூர், வீரப்பனூர், உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக, பிச்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் பகுதியில் உள்ள ஒரு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில், வயது முதிர்ந்த தம்பதி காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட முருகன்பதி மலைவாழ் கிராமத்தில் சுமார் 50 மேற்பட்ட குடும்பத்தினர், சுமார் 30 வருடங்களுக்கு முன்பு,அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அந்த வீடுகளை சரிவர பராமரிக்ககாமல் விட்டதால், தற்போது அந்த வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலமுறை நேரில் சென்று பொதுமக்களிடம், ‘‘இந்த வீடுகளில் வசிக்க வேண்டாம், வீட்டை புதுப்பிக்க, முதல்வர் மறு கட்டமைப்பு திட்டத்தின் மூலம், தலா ரூ.2.40 லட்சம் நிதி வழங்க தயாராக இருக்கிறோம், அந்த நிதியின் மூலம் வீட்டை புதுப்பித்து கொள்ளுங்கள்’’, என வலியுறுத்தினர். ஆனாலும் அதை காதில் வாங்கி கொள்ளாமல், பழுதடைந்த வீடுகளிலேயே மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அனைவரும் அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
The post அதிகாரிகள் சொல்லியும் கேட்காமல் பழுதான தொகுப்பு வீட்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் appeared first on Dinakaran.