அதிக வரி வருவாய் ஈட்டித் தந்த 39 அலுவலர்களுக்கு ரூ.20,000 ஊக்கத் தொகை: அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

3 days ago 3

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன், வணிகவரித்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் கழிவு செய்யப்பட்ட ஏழு வாகனங்களுக்கு பதிலாக ரூ.61,30,474 மதிப்பீட்டில் புதிய ஏழு மகிந்திரா போலேரோ வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை(வடக்கு), காஞ்சிபுரம், ஈரோடு, கடலூர், ஓசூர் மற்றும் விருதுநகர் கோட்டங்ளில் பணிபுரியும் அலுவலர்களின் பயன்பாட்டிற்க்காக அமைச்சரால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் திடீர் ஆய்வு மற்றும் செயலாக்க நடவடிக்கைகளின் காரணமாக ரூ.1692 கோடி கூடுதல் வருவாய். (2023-24ம் ஆண்டு – ரூ.1335 கோடி, 2024-25ம் ஆண்டு – ரூ.3027 கோடி) ஈட்டி தந்த தமிழ்நாடு அரசின் வணிகவரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவின் 39 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.20,000 ஊக்கத்தொகை அமைச்சர் வழங்கினார்.

மேலும், மதுரை கோட்டம், போடிநாயக்கனுர் வரிவிதிப்பு சரகத்தை சார்ந்த மறைந்த வணிகர் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினரான மகாலட்சுமிக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் குடும்ப நல நிதி உதவித் தொகையாக ரூ.3,00,000 காசோலை வழங்கினார். இக்கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) பூங்கொடி, மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post அதிக வரி வருவாய் ஈட்டித் தந்த 39 அலுவலர்களுக்கு ரூ.20,000 ஊக்கத் தொகை: அமைச்சர் மூர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article