
பெங்களூரு,
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அந்நிறுவனம், ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 9¼ மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ளது. அந்த நேரத்தை தாண்டி ஊழியர்கள் பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க தானியங்கி கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. யாராவது 9¼ மணி நேரத்தை தாண்டி பணியாற்றினால், அந்த கருவி எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யும்.
மேலும், கம்பெனியின் மனிதவள துறை, மாதந்தோறும் ஊழியர்களின் பணி நேரத்தை கண்காணிக்கிறது. பணி நேரத்தை தாண்டி வேலை செய்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுக்கிறது. ''உங்கள் அர்ப்பணிப்பை பாராட்டுகிறோம். அதே சமயத்தில், ஆரோக்கியத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நல்லது'' என்று அதில் அறிவுறுத்துகிறது. 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்தியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் பணியாற்றினால்தான் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தலாம் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு முற்றிலும் எதிராக அந்த நிறுவனம் இக்கொள்கையை கடைபிடித்து வருகிறது. இளம் தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள், நேரம் தவறி சாப்பிடுவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.