மதுரை: அஜித்குமார் கொலை வழக்கு வழக்கில், மதுரை 4-வது கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இரண்டு, மூன்று நாட்களில் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் ஹென்றிடிபேன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 1) உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்குப் பிறகு, வழக்கறிஞர் ஹென்றிடிபேன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்ரவதையால், ஒரு சிறப்பு விசாரணைக் குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித்குமார் சார்பாக பல அமைப்புகள், இயக்கங்கள், வழக்கறிஞர்கள், திருப்புவனத்தில் பணிபுரிகின்ற வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து, நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். எனவே, இந்த வழக்கில் வாதாடிய அனைத்து வழக்கறிஞர்களின் சார்பாக பேசுகிறேன்.