சிவகங்கை: அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 3 நாட்களாகியும், இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. அஜித்குமார் மீது புகார் தெரிவித்த நிகிதாவுக்கு ஆதரவாக, தனிப்படை விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரி யார் என பல்வேறு கேள்விகளுக்கு சிபிஐ விசாரணையில்தான் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி தனிப்படை போலீஸார் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கில், முதலில் தனிப்படை போலீஸாருக்கு சாதகமாக திருப்புவனம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதியப்பட்டது. அதில், விசாரணையின்போது அஜித்குமார் தப்பியோடியபோது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனிப்படையில் இருந்த வாகன ஓட்டுநர் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.