'அக்னி நட்சத்திரம்' 4-ந்தேதி தொடங்குகிறது: வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?

1 month ago 12

சென்னை,

25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஆங்காங்கே வெப்ப சலனத்தால் கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. அதுவும் வருகிற 30-ந்தேதிக்கு பிறகு ''குட்-பை'' சொல்ல இருக்கிறது.இப்படி இருக்கும் சூழலில் வெயிலின் உக்கிரத்தை கக்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்தே பல இடங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில நிமிடங்கள் மின் விசிறி நிறுத்தப்பட்டாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு அசவுகரியத்தை உணருகிறோம். அப்படி பார்க்கையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்களிடம் கேட்டபோது அவர்கள், 'லா-நினோ மற்றும் ஐ.ஓ.டி. என்று கூறப்படும் கடல் அமைப்புகள் சமநிலையில் இருப்பதால், கடல் சார்ந்த அலைவுகள் முற்றிலுமாக வலுவிழந்து, மழைக்கான சாதகமான சூழல் எதுவும் ஏற்படாத நிலை இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் வெப்பம் சற்று உயர்ந்தே காணப்படும். இருப்பினும் வெப்ப அலை வீசும் அளவுக்கு இருக்காது என்பது ஆறுதல் வார்த்தையாக இருந்தாலும், வறண்ட காற்று மற்றும் அதிக ஈரப்பதத்தால் உணரும் வெப்பநிலையின் தாக்கம் இருக்கும். இதனால் அசவுகரியத்தை நாம் உணருவோம்' என்றனர்.

கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்ற வானிலை ஆய்வாளர்களின் பதில் ஆறுதலை கொடுக்கிறது. ஆனாலும் கடல் சார்ந்த அலைவுகள் தொடர்ந்து அதே நிலை நீடித்தால், நிலைமை எப்படி இருக்கும்? என்பது அப்போதுதான் தெரியும்.

Read Entire Article