அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் காயமடைந்த 8 மாத குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12-ந் தேதி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள். அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்யப்பட்டது.
இன்று காலை வரை, 211 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 189 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒப்படைக்கப்பட்ட உடல்களில், 189 பேரில் 142 இந்தியர்கள், 32 பேர் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள், 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் மற்றும் ஒரு கனடா நாட்டை சேர்ந்தவர் ஆவர். தரையில் இறந்த ஏழு பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் 8 மாத குழந்தை த்யான்ஷ் 28% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தது. தற்போது, 8 மாத குழந்தை த்யான்ஷ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கட்டடத்தில் விமானம் விழுந்ததில் காயமடைந்த மனிஷா கச்சோடியா, அவரது 8 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post அகமதாபாத் விமான விபத்தில் காயமடைந்த 8 மாத குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்..!! appeared first on Dinakaran.