சென்னை: இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் 1984ம் ஆண்டு உள் நாட்டு போர் காரணமாக சரவணமுத்து, தமிழ்செல்வி தம்பதியர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின்னர், வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 1987ம் ஆண்டு கோவையில் இந்த தம்பதியருக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை கோவையிலேயே பள்ளிப்படிப்பை முடித்து கோவையை சேர்ந்தவரை திருமணம் செய்து 37 ஆண்டுகளாக கோவையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருப்பதற்கான பதிவை புதுப்பிக்க அணுகிய போது, சரவணமுத்து, தமிழ்செல்வி தம்பதியரின் பதிவை புதுப்பிக்க மறுத்ததுடன் 1987 ஜூலைக்கு பிறகு பிறந்தவர் இந்தியாவில் பிறந்தவர் என்ற அடிப்படையில் மட்டும் இந்திய குடியுரிமை கேட்க முடியாது எனக்கூறி ரம்யாவின் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு ஒன்றிய அரசு உத்தரவிடப்பட்டது. இதனிடையே இந்திய குடியுரிமை கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளமுகில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இலங்கைக்கு சென்று ஆவணங்களை பெற்று இந்தியாவுக்கு வருமாறு கூறுவது தேவையில்லாதது. இந்தியாவில் பிறந்து, இந்தியரை மணந்து 37 வருடமாக வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் குடியுரிமை கோரி அவர் விண்ணப்பம் அளிக்க மனுதாரரை அனுமதிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தின் மீது ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரை இந்தியாவில் இருந்து மனுதாரரை வெளியேற்ற கூடாது என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
The post அகதியாக தமிழகம் வந்த இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை தரலாமா?: ஒன்றிய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.