சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரம்மாண்டமான விமான வான் சாகசக் காட்சி நடைபெற்றது. 72 விமானங்கள் நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 15 லட்சம் பேர் பார்த்ததன் மூலம் இந்நிகழ்ச்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. தற்போது விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விமானப் படையின் திறமையை பறைசாற்றும் வகையிலும், விமானப் படையில் இளைஞர்கள் சேர ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் விமானப்படை தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.