திருச்சி: தமிழக கோயில்களில் பக்தர்களின் செலுத்தும் காணிக்கை மாதம் ரூ.53.70 கோடி அறநிலையத் துறைக்குச் செல்லும் நிலையில், 90 சதவீத கோயில்களில் இரவு விளக்குகள் எரிவதில்லை என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி- ஜம்புகேஸ்வரர் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறையினர் பக்தர்களின் காணிக்கை பணத்தை, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து தினமும் ரூ.1.79 கோடி என, மாதத்துக்கு ரூ.53.70 கோடியை எடுத்துச் செல்கின்றனர். அதேநேரத்தில், மின் கட்டண செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோயிலை அதிகாலையில் திறக்காமல், காலை 9 மணிக்கு மேல் திறக்கின்றனர். கோயில் கருவறையில் கடந்த 50 ஆண்டுகாலமாக பூஜை செய்பவருக்கு தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.