
டேராடூன்,
உத்தரகாண்டை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப சண்டையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். பா.ஜ.க.வில் முன்னாள் மகளிரணி நிர்வாகியாக இருந்த அவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். ஆனால் அந்த பெண், சுமித் பத்வால் என்ற வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்த பெண்ணின் மகன், தந்தையுடன் வசிக்கிறார். ஆனால், மகளை தன்னுடன் அழைத்து சென்ற அவர் சமீபத்தில் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுமித் மற்றும் அவருடைய நண்பரான சுபம் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதன்முறையாக அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். காரில் சென்றபோது, மதுவை ஊற்றி கொடுத்து அந்த சிறுமியை தாயின் கண் முன்னே 2 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுபோன்று ஆக்ரா, பிருந்தாவன் மற்றும் ஹரித்வார் உள்ளிட்ட பகுதியிலுள்ள ஓட்டல்களில் ஏழெட்டு முறை பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் அந்த பெண்ணின் பெயரிலான ஓட்டலும் அடங்கும். சுமித்துடன் சேர்ந்து அந்த பெண் ஹரித்வார் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இதுபோன்ற உடல்ரீதியான உறவுகள் இயல்பானது என மகளிடம் அந்த தாய் கூறி, சிறுமியை அதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். ஒவ்வொரு முறை பலாத்காரம் நடந்தபோதும், சிறுமிக்கு மதுபானம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கொடூர சம்பவங்களின்போது, அந்த பெண்ணும் உடன் இருந்திருக்கிறார்.
இதனை வெளியே கூறினால், சிறுமியையும், சிறுமியின் தந்தையையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். எனினும், இதுபற்றி அறிந்து அதிர்ந்த தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. சுமித் மற்றும் அந்த பெண் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய சுபம், போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், பா.ஜ.க. மாவட்ட தலைவரான அசுதோஷ் சர்மா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உடனடியாக அந்த பெண்ணை நீக்கி அதற்கான கடிதம் ஒன்றை வெளியிட்டார். அவருடைய செயல்பாடுகள் பற்றி முன்பே புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதனால், 2024-ம் ஆண்டு ஆகஸ்டிலேயே மகளிரணி பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பெற்ற மகளை தாயின் கண் முன்னே அவருடைய சம்மதத்துடன், கள்ளக்காதலன் மற்றும் அவருடைய நண்பரால் பலமுறை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.