50 ஆண்டுக்கு முன் திருடன்… இன்று கேட்டரிங் தொழிலதிபர்… பாட்டியிடம் ரூ.37.50 திருடியதற்கு வாரிசுகளுக்கு ரூ.2.80 லட்சம் வழங்கினார் : கோவை டூ இலங்கை வரை நடந்த சுவாரஸ்யம்

6 months ago 11

கோவை: இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அலகொல பகுதியில் ஒரு தேயிலை தோட்டத்தில் சுப்பிரமணியம், எழுவாய் தம்பதி பணியாற்றினர். 1970ல் அவர்கள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தபோது, தேயிலை தோட்ட தொழிலாளிகளான பழனிச்சாமி-மாரியம்மாள் தம்பதியின் மகனான 15 வயது சிறுவன் ரஞ்சித்தை உதவிக்கு அழைத்தனர். அப்போது அவன், வீட்டில் ஒரு பொட்டலத்தில் இருந்த ரூ.37.50ஐ திருடியுள்ளான். அந்த காலக்கட்டத்தில் அது பெரும் தொகையாகும். பின்னர் எழுவாய் பாட்டி அங்குள்ள கோயிலுக்கு சென்று ஈடு (கடவுளிடம் முறையிடுவது) போட்டாராம். அதே கோயிலுக்கு ரஞ்சித் சென்று, பணத்தை திருடிவிட்டேன், என்னை ஒன்றும் செய்து விடாதே என்று வேண்டியுள்ளார்.

ரஞ்சித் 2ம் வகுப்பு மட்டுமே படித்த நிலையில், 1977 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்தார். இங்கு சிறிய பெட்டிக்கடை வைத்து நஷ்டமடைந்தார். பிறகு பல்வேறு மாவட்டங்களில் மூட்டை தூக்குதல், வீட்டு வேலை செய்வது, ஓட்டல் வேலை செய்வது என பல வேலைகளை செய்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்த இவர் சிறிய கேட்டரிங் சர்வீசை ஆரம்பித்தார். பின்னர், படிப்படியாக உயர்ந்து, தற்போது கேட்டரிங் தொழில் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை அளித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ரஞ்சித்துக்கு புளியம்பட்டியில் ஒரு கடையில் லுங்கி வாங்கிவிட்டு பணம் தராமல் வந்தது, பெட்டிக்கடை கடன், திருடியது உள்ளிட்ட சம்பவங்கள் அவரை பெரிதும் உறுத்தியது.

இதையடுத்து கடனை திருப்பி செலுத்திய ரஞ்சித், வங்கியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடனையும் திரும்ப செலுத்தினார். அதேபோல், எழுவாய் பாட்டியின் வீட்டில் திருடிய பணத்தையும் திருப்பித்தர முடிவு எடுத்து, அவரது சந்ததியினரை தேடினார். இதில் எழுவாய் பாட்டிக்கு முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் என 3 ஆண், செல்லம்மாள் என்ற பெண் வாரிசு இருப்பது தெரியவந்தது. அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை திருடியதையும், திருப்பி தர விரும்புவதாகவும் ரஞ்சித் தெவித்துள்ளார். இதை கேட்டு அந்த குடும்பத்தார் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சொன்னபடி ரஞ்சித் இலங்கைக்கு சென்று பழனியாண்டி, கிருஷ்ணன் மற்றும் இறந்துவிட்ட முருகையாவின் வாரிசுகளுக்கு புத்தாடைகள் மற்றும் தலா 70 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். செல்லம்மாள் இந்தியாவில் குடியேறி இறந்துவிட்டதை அறிந்து திருச்சியில் உள்ள அவரது வாரிசுகளுக்கும் 70 ஆயிரம் ரூபாயை அளித்திருக்கின்றார். பொருளாதார நெருக்கடியில் இருந்த அவர்கள், ரஞ்சித் அளித்த பணம் மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன் சுப்பிரமணியம் – எழுவாய் பாட்டியிடம் திருடிய பணத்தை திருப்பி கொடுத்து, அவர்களின் வாரிசுகள் மனதை திருடிய கேட்டரிங் உரிமையாளர் ரஞ்சித்தின் செயல் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

The post 50 ஆண்டுக்கு முன் திருடன்… இன்று கேட்டரிங் தொழிலதிபர்… பாட்டியிடம் ரூ.37.50 திருடியதற்கு வாரிசுகளுக்கு ரூ.2.80 லட்சம் வழங்கினார் : கோவை டூ இலங்கை வரை நடந்த சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Read Entire Article