
சென்னை,
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 21-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்குப் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, தமிழ்நாடு போலீஸ், சுங்க இலாகா உள்பட 34 அணிகளும், மகளிர் பிரிவில் ரைசிங் ஸ்டார், எஸ்.டி.ஏ.டி., எத்திராஜ், தமிழ்நாடு போலீஸ் உள்பட 16 அணிகளும் கலந்து கொள்கின்றன.
நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் தினசரி மாலை 3 மணிக்கு தொடங்கி போட்டி நடைபெறும். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2 லட்சமாகும். ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், மகளிர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். இந்த தகவலை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ.கோபி தெரிவித்துள்ளார்.