
லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது.
இரு அணிகளும் முதல் இன்னிங்சில் ஒரே ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 4ம் நாளான இன்று 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கருண் நாயர் 14 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் கில் 6 ரன்னிலும், ஆகாஷ் தீப் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அவுட் ஆகினர். 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா வெற்றிபெற 135 ரன்கள் தேவைப்படுகிறது. இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆட்டத்தில் இன்னும் ஒரேநாளே எஞ்சியுள்ள நிலையில் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 5ம் நாள் ஆட்டம் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.