மும்பை: ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்த பந்துகளில் 7000 ரன்கள் அடித்த வீரர் என்ற இமாலய சாதனைபடைத்த ரோகித் சர்மா, இதன் மூலம் கோஹ்லியின் முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 228 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியின்போது ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
அவர் 5,303 பந்துகளில் 7000 ரன்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு விராட் கோஹ்லி 5,403 பந்துகளில் 7000 ரன்களை அடித்திருந்தார். இதன் மூலம் 100 பந்துகள் குறைவாக சந்தித்து 7000 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் ரோகித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோஹ்லி, ரோகித் என 2 வீரர்கள் மட்டுமே 7000 ரன்களைக் கடந்திருக்கின்றனர். மேலும், இந்தப் போட்டியில் அவர் 4 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர்களை (302) கடந்த 2வது வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா செய்திருக்கிறார்.
இதற்கு முன் கிறிஸ் கெயில் மட்டுமே ஐபிஎல் தொடரில் 357 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். இவை அனைத்தையும் கடந்து, ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் மற்றும் 300 சிக்ஸர்களை அடித்த ஒரே வீரர் என்ற புதிய உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 300 சிக்சர்கள்… 7000 ரன்கள் குவிப்பு: ஐ.பி.எல். தொடரில் ரோகித்சர்மா உலக சாதனை appeared first on Dinakaran.