28 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணப்பாடி மகா மாரியம்மன், செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

1 month ago 13

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கண்ணப்பாடி கிராமத்தில் மகா மாரியம்மன், செல்லியம்மன் கோயில்கள் உள்ளது. இந்த கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று அன்னபட்சி, சிங்க, குதிரை, வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் மகா மாரியம்மன், செல்லியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து, மேளதாளம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் கிராம பொதுமக்கள், இளைஞர்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கண்ணப்பாடி கிராமம் மட்டுமின்றி நத்தக்காடு, தேனூர், டி.களத்தூர், அடைக்கம்பட்டி, பழைய விராலிப்பட்டி, புது விராலிப்பட்டி, மாவிலிங்கை போன்ற சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பாடாலூர் போலீசார், தீயணைப்பு துறையினர், மின் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post 28 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணப்பாடி மகா மாரியம்மன், செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article