சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத் திறன் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி வழங்குகிறார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், எம்பிபிஎஸ் முடித்த 24 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் 14,855 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே, கூடுதலாக 89 காலி இடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலி இடங்கள் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 4,585 பேர் பங்கேற்றனர்.