18 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு சாம்பியன்: பரபரப்பான இறுதி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது

1 day ago 5

அகமதாபாத்: 18வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. லீக் சுற்றின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இறுதிப்போட்டிக்கு பஞ்சாப்பும், பெங்களூரும் தகுதி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் இறுதிப் போட்டி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

அதில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக, பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 16 ரன் (9 பந்து, ஒரு சிக்சர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மயங்க் அகர்வால் 24 ரன்னிலும் (18 பந்து, ஒரு சிக்சர், 2 பவுண்டரி), கேப்டன் ரஜத் படிதார் 26 ரன்னிலும் (16 பந்து, 2 சிக்சர், ஒரு பவுண்டரி) நடையை கட்டினர்.

நிதனமாக விளையாடிய விராட் கோஹ்லி 43 ரன்னில் (35 பந்து, 3 பவுண்டரி), பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த லிவிங்ஸ்டோன் 25 ரன் (15 பந்து, 2 சிக்சர்), ஜித்தேஷ் சர்மா 24 ரன் (2 சிக்சர், 2 பவுண்டர்), ரோமியோ ஷெப்பர்ட் 17 ரன் (9 பந்து, ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி), க்ருணால் பாண்ட்யா 4 ரன் என சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து வெளியேற 20 ஓவர் முடிவில், பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3, ஒமர்ஸாய், வைஷாக், சஹகல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறஙகியது. துவக்க வீரர்களாக பிரப்சிம்ரன், பிரியனாஷ் ஆர்யா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில் பிரப்சிம்ரன் 26 ரன்(22 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ் இங்லீஷ், பிரியனாஷ் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி நிலையில், பிரியனாஷ் ஆர்யா 24 (19 பந்து, 4 பவுண்டரி), ஜோஸ் இங்லீஷ் 39 ரன் (23 பந்து, 4 சிக்சர், ஒரு பவுண்டரி) அடித்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும், நேஹல் வாதேரா 15 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன்னிலும், 1 ரன்னிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். ஒரு பக்கம் ஷஷங்ச் சிங் சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டார். ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.பெங்களுரு அணியில் புவனேஸ்வர் குமார், குருணல் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினர். 18 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு கோப்பையை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 18 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு சாம்பியன்: பரபரப்பான இறுதி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது appeared first on Dinakaran.

Read Entire Article