* செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாட்டம்
சென்னை: கலைஞரின் 102வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 102வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கோலாலகமாக கொண்டாடப்பட்டது. கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள், காவலாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு அவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், கே.வி.தங்கபாலு, அசன் மவுலானா எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் உடனிருந்தனர். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் நான்கு சக்கர ஸ்கூட்டியில் வந்து மலர் தூவி மரியாதை செய்தனர். இது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது சங்க மாநில பொதுச் செயலாளர் பா.சந்தானகிருஷ்ணன், பொருளாளர் க.இளங்கோவன் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர். அதேபோல சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்தில் உள்ள கலைஞரின் படத்திற்கும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்திலும் கலைஞரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை முதல் திமுக கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் படத்தினை வைத்து, கட்சியினர் அனைவரும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் தமிழகம் முழுவதும் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கப்பட்டது. கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என தொடர் நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்
திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளம் பதிவில், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள். ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
The post 102வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை appeared first on Dinakaran.