
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை. இரு பேட்ஸ்மேன்களும் (ரிஷப் பண்ட் , கே.எல்.ராகுல்) மிகச் சிறப்பாக விளையாடினார்கள் . அற்புதமான பேட்டிங் செய்தனர் . ரிஷப் இங்கிலாந்து பந்துவீச்சு தாக்குதலுக்கு உண்மையில் அழுத்தம் கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் அந்த ரன் அவுட் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. என தெரிவித்தார் .
போட்டியின் முதல் இன்னிங்சில் பண்ட் - ராகுல் ஜோடி பொறுமையாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய பண்ட் தனது ஸ்டைலில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் கே.எல்.ராகுல் சதத்தை நோக்கி முன்னேறினார்.இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். என்பது குறிப்பிடத்தக்கது .