ரூ14 ஆயிரம் கடன் தகராறில் நண்பரின் 2 மகன்கள் கழுத்து நெரித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி வெறிச்செயல்

2 hours ago 4

ஆம்பூர்: குடியாத்தம் அருகே ரூ14 ஆயிரம் கடன் தகராறில் நண்பரின் 2 மகன்களை கழுத்து நெரித்துக்கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி வினிதா. மகன்கள் யோகித்(6), தர்ஷன்(4). வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடி அருகே ஏரிப்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார்(25), கட்டிட மேஸ்திரி. நண்பர்களான யோகராஜும் வசந்தகுமாரும் ஒன்றாக கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இவர்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. இந்நிலையில் வசந்தகுமார், யோகராஜுக்கு ரூ14 ஆயிரம் கடன் கொடுத்தாராம். ஆனால் அந்த பணத்தை திருப்பிக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து கேட்டபோது, பணத்தை கொடுத்து விட்டதாக யோகராஜ் கூறினாராம். இதையறிந்த வசந்தகுமாரின் மனைவி சந்தியா, கணவரிடம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் சந்தியா கோபித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதனால் வசந்தகுமார் வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வசந்தகுமார் நேற்று மாலை தனது பைக்கில் யோகராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த வினிதாவிடம், உங்கள் கணவர் யோகராஜ், மகன்களை அழைத்து வரச்சொன்னதாக கூறியுள்ளார். இதனை நம்பிய வினிதா, தனது மகன்களை வசந்தகுமாருடன் பைக்கில் அனுப்பியுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வரவில்லை. ஆனால் வீட்டிற்கு தனியாக வந்த யோகராஜிடம், குழந்தைகள் குறித்து வினிதா கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த யோகராஜ், குழந்தைகளை காணவில்லை என ஆம்பூர் தாலுகா போலீசில் நேற்று இரவு புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார், குழந்தைகளை அழைத்து சென்ற வசந்தகுமாரின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது சிங்கல்பாடியில் இருப்பது தெரியவந்தது. அவரை தேடி போலீசார் மற்றும் யோகராஜ் ஆகியோர் சிங்கல்பாடி கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள சிங்கத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, வழியில் யோகித்தும், தர்ஷனும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தகுமாரை தேடி வந்தனர்.

அப்போது அப்பகுதியில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த வசந்தகுமாரை இன்று அதிகாலை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் வசந்தகுமார் கூறியதாவது: யோகராஜ் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை. இதனால் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்த பணம் தொடர்பாக யோகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை அசிங்கப்படுத்தி விட்டனர். எனது மனைவி இந்த பிரச்னையால் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரது 2 குழந்தைகளையும் கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர். இந்த கொலைக்கு பயன்படுத்திய வசந்தகுமாரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தகராறில் நண்பனின் குழந்தைகளை கட்டிட மேஸ்திரி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ரூ14 ஆயிரம் கடன் தகராறில் நண்பரின் 2 மகன்கள் கழுத்து நெரித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி வெறிச்செயல் appeared first on Dinakaran.

Read Entire Article