விருதுநகர்: “முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
விருதுநகரில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.16) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த 2-ம் தேதி பிரதமர் மோடி இந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார். இதுவரை இந்திய அளவில் 4 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். உலகளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜக. ஏற்கெனவே 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 11 கோடி உறுப்பினர்களாக்க இலக்கு வைத்துள்ளோம். தமிழகத்திலும் 1 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கோடு எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.