சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் இன்று (திங்கள்கிழமை) காலை 11.30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் சர்ச்சையானது. தொடர்ந்து அண்மையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்டதும் விவாதப் பொருளானது. அதில் அவர், “தமிழகத்தில் இதற்கு முன் யாரும் கூட்டணி ஆட்சி என குரலை உயர்த்தினார்களோ, இல்லையோ; 2016ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை விசிக உயர்த்தியது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது வேறு; தொகுதி பங்கீடு என்பது வேறு. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, 1999ல் விசிக முன்வைத்த முழக்கம்.