சென்னை: “முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்,” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிகவின் 20-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.14) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அலுவலகத்துக்கு புதிதாக வைக்கப்பட்டுள்ள ‘கேப்டன் ஆலயம்’ எனும் பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேமுதிக துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.