மதுரை,
மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சரண்யா, பரிமளா என 2 பெண்கள் உயிரிழந்தனர். 3 பெண்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். உரிய அனுமதி பெறாமல் மகளிர் விடுதி நடத்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியை காலி செய்யக்கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.