கோவை: “பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக” மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவையில் மக்கள் சேவை மையத்தின் சுயம் திட்டத்தின் கீழ் 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.12) நடைபெற்றது. இதில் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தொழில் செய்வதற்கு செயல், திறமை ஆகியவற்றுடன் தன்னம்பிக்கையும் வேண்டும். பிரதமர் மக்கள் நிதி திட்டம் மூலம் மொத்தம் 53 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் பெண்களுக்கு 29.6 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. தமிழகத்தில் 94 லட்சம் வங்கி கணக்குகளும், கோவையில் 5 லட்சம் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.