திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாயமான பெண் தொழிலாளரை கண்டுபிடிக்காத காவல் துறையை கண்டித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் சாலை மறியலால் திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செப்.16) 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தன். இவரது மனைவி காமாட்சி (44). இவர், இறையூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து, பின்னர் இங்கிருந்து கட்டுமான பணிக்கு பிற இடங்களுக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். கட்டுமான பணிக்காக திருவண்ணமலைக்கு கடந்த 8-ம் தேதி சென்ற காமாட்சி மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காமாட்சியை கண்டுபிடித்து தரக் கோரி பாய்ச்சல் காவல் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி புகார் அளித்துள்ளனர். ஆனால், அதற்கும் பலனில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் காணாமல் போன காமாட்சியின் நிலை குறித்து, இதுநாள் வரை எந்தத் தகவலும் தெரியவில்லை.