புதுச்சேரி: பாண்டி மெரினாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் 3 மணி நேரம் தொடர் மறியலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மற்றொரு பகுதி மீனவர்களுக்கு வழிவிடாததால் கைகலப்பு ஏற்பட்டது.
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வம்பாகீரப்பாளையத்தில் பாண்டி மெரினா என்ற பெயரில் கடற்கரை உருவாக்கப்பட்டு, பொழுது போக்கு அம்சங்களுடன் வணிகவளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். அங்குள்ள துறைமுக முகத்துவார பகுதியிலிருந்து படகு மூலம் கடலுக்குள் சவாரி செய்யவும் வகையில் பாண்டி மெரினா நிர்வாகம் சார்பில் படகு நிறுத்தும் தளம் ( ஜெட்டி) அமைக்கப்பட்டு வருகிறது.