பரமக்குடி: இமானுவேல் சேகரனின் 67-வதுநினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பு தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.
இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி தலைமையில், அவரது பேரன்கள் ரமேஷ்குமார், கோமகன், சக்கரவர்த்தி, சந்திரசேகர், பேத்தி ரூபா மற்றும் குடும்பத்தினர் நேற்று காலை மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, செல்லூர் கிராம மக்கள் சார்பில் ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி மரியாதை செலுத்தினார். திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், பி.மூர்த்தி, கயல்விழி, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இமானுவேல் சேகரன் குறித்து அவரது பேரன் செல்ஷியா ரமேஷ்குமார் எழுதிய ‘டைம்லெஸ் டேப்பஸ்ட்ரி’ என்ற ஆங்கில நூலை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார். அதிமுக சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.