நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

2 hours ago 2

AAP, Delhi, BJPபுதுடெல்லி : ‘நிலைக்குழு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆம் ஆத்மி கவுன்சிலர்களை வேட்டையாடும் தனது பழைய குதிரை பேர யுக்தியை பாஜ பயன்படுத்துகிறது,’ என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. மாநகராட்சியில் காலியாக உள்ள ஒரு நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. இதில், ஆம் ஆத்மி சார்பில் கவுன்சிலர் நிர்மலா குமாரியும், பாஜ சார்பில் கவுன்சிலர் சுந்தர் சிங்கும் போட்டியிடுகின்றனர்.

மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று முன்தினம், இந்த 2 பேரும் தங்களின் மனுவை தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம், நிலைக்குழு தேர்தல் உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜ குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், தனது கட்சி கவுன்சிலர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை தருவதாக ஆசை காட்டுவதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் துர்கேஷ் பதக், சஞ்சீவ் ஜா மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர் ரிங்கு முகேஷ் சோலங்கியின் கணவர் முகேஷ் சோலங்கி ஆகியோர் நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர்.ஆம் ஆத்மி எம்எல்ஏ.வும், டெல்லி மாநகராட்சியின் ஆம் ஆத்மி பொறுப்பாளருமான துர்கேஷ் பதக் கூறியதாவது:
கெஜ்ரிவால் தலைமையில் நேர்மையான அரசியல் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. தனது மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டால், மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் அக்னி பரீட்சையில் வெற்றி பெறும் வரையில், முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன் என்று கூறிய ராஜினாமா செய்தார்.

மறுபுறம், பாஜ தலைமையில் இன்னொரு அரசியல் நடக்கிறது. இந்த அரசியலில், பொய், வஞ்சகம், நேர்மையின்மை, மோசடி, கட்சிகளை உடைத்து, எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர்களை விலைக்கு வாங்குவது நடக்கிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஆம் ஆத்மியை மாநகராட்சி தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் டெல்லி மக்கள் வெற்றிபெறச் செய்தனர். பாஜவினர் மூன்று முதல் நான்கு மாதங்கள் சபையில் தொடர்ந்து சண்டையிட்டனர், அது கைகலப்புக்கு கூட வழிவகுத்தது. அவர்கள் தன்னிச்சையாக 10 நியமன உறுப்பினர்களை (ஆல்டர்மேன்கள்) நியமித்து, அவர்களை அவையில் வாக்களிக்க கட்டாயப்படுத்த விரும்பினர். அதன் பிறகு, கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் பணியில் பாஜ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தற்போது, நிலைக்குழு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எங்கள் கவுன்சிலர்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை பணம் கொடுப்பதாக பாஜ தற்போது வலை வீசுகிறது. மேலும், அவர்கள் பாஜ.வில் சேரவில்லை என்றால், விசாரணை அமைப்புகள் மூலம் அவர்களை துன்புறுத்துவோம் என்று மிரட்டுகிறார்கள்.
பவானாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ராம் சந்தரை இதுபோல் மிரட்டி தான், பாஜ அவரை வலுக்கட்டாயமாக தனது கட்சியில் சேர்த்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஆம் ஆத்மிக்கு திரும்பியபோது, பாஜவினர் அவரை அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்றனர். இதேபோல், கடந்த சில நாட்களாக பாஜவினர் ஒவ்வொரு தந்திரத்தையும் கையாண்டு ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைக்கு வாங்க தொடர்ந்து முயற்சித்து வரும் பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

‘எந்த எல்லைக்கும் செல்லும்’
புராரியைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா தனது தொகுதியில் உள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர்களை பாஜ.வினர் தொடர்பு கொண்டதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர் கூறுகையில், ‘எம்எல்ஏ.க்களை திருடி, கவுன்சிலர்களை கடத்தி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வதுதான் பாஜ.வின் வேலையாக உள்ளது. மாநகராட்சியில் முதல் நாளிலிருந்தே ஆம் ஆத்மியின் ஆதரவு தளத்தை அழித்து, எந்த வகையிலும் மாநகராட்சியை பிடித்து விட பாஜ சதி செய்கிறது,’ என்றார்.

BJP bargains Rs 2 crore to attract councilors in standing committee elections

The post நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம் appeared first on Dinakaran.

Read Entire Article