“நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’கொய்யாவால் குதூகலிக்கும் தஞ்சை விவசாயி!

4 days ago 6

அரை ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ.2 முதல் ரூ.2.50 லட்சம் வரை வருமானம் பார்த்து வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெற்கு நத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம். இன்றல்ல நேற்றல்ல… கடந்த 5 ஆண்டுகளாக கொய்யா சாகுபடியில் இந்த வருமானத்தைப் பெற்று வரும் வெங்கடாச்சலத்தைச் சந்திக்கச் சென்றோம். கொய்யா மரங்களுக்கு கவாத்து செய்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார். “அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எல்லாரையும் போல நானும் நெல் சாகுபடிதான் செய்து வந்தேன். வருசத்துக்கு 2 போகம் குறுவை, சம்பா நெல் சாகுபடி செய்து வந்தேன். நாற்று, உரச்செலவு, களைபறித்தல் என அனைத்து செலவுகள் போக அரை ஏக்கர் நிலத்தில் ஒரு போகத்திற்கு ரூ.15 ஆயிரம் லாபம் கிடைப்பதே பெரிசு. அதிலும் கனமழை பெய்தால் அவ்வளவுதான். முழுக்க நஷ்டம். அதை ஈடுகட்ட என்ன செய்தாலும் முடியாது. இதனால்தான் மாற்றுப்பயிர் செய்யலாம் என்று யோசனை ஏற்பட்டுச்சு. நிறைய பேரிடம் ஆலோசனை கேட்டேன். நானும் பல இடங்களுக்கு போய் பார்த்தேன். அப்போ என் மனசுக்கு கொய்யா சாகுபடி செய்யலாம்னு தோணுச்சி. தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகுது. இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தை மனதில் வைத்து, அதிக தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால்மட்டுமே, விவசாயம் வில்லங்கமில்லாமல் நடக்கும்.

அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யாவை தேர்வு செய்தேன். என்னோட அரை ஏக்கர் நிலத்தை முதலில் கொய்யா சாகுபடிக்கு தகுந்தாற்போல் தயார் செய்தேன். கொய்யா பயிரிட இருக்கும் நிலத்தை நான்கு முறை உழுதேன். ஆரம்பத்திலேயே வயலைநல்லபடியா உழுது பராமரிச்சுட்டா அதுக்குப் பிறகு களை எடுக்கிறது மட்டும்தான் வேலையாக இருக்கும். அரை மீட்டர் ஆழம் மற்றும் அகலம் என்ற அளவில் குழிகளைத் தோண்டி மேல் மண்ணுடன் 20 கிலோ தொழுஉரம் கொண்டு நிரப்பினேன். கொய்யாக் கன்றுகளை குழியின் நடுவே நட்டு மண்ணால் அணைப்பு கொடுத்து செடிகள் நன்கு வேர் பிடித்து வளர வழிசெய்தேன். நான் அரை ஏக்கரில் 14 சதுர அடிக்கு ஒரு கன்று என மொத்தம் 100 கொய்யா செடிகளை நடவு செய்தேன். நான் நடவு செய்துள்ள கொய்யா லக்னோ 49 ரகம். செடிகளை நடவு செய்வதற்கு முன்பு தொழு உரத்தைப் போட்டேன். செடிகள் வளர்ந்து வரும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுவேன்.

எனது கொய்யாத் தோட்டத்தில்புற்களையே பார்க்க முடியாது. அடிக்கடி களை எடுத்துக் கொண்டே இருப்பேன். கொய்யா சாகுபடியில் இது மிகவும் அவசியம். நோய்த் தாக்குதலைக் கட்டுப்
படுத்த வேண்டும் என்றால் தொழு உரம் போட்டு ஆர்கானிக் முறையில் செய்வது சிறந்தது எனத் தெரிந்துகொண்டு அந்த முறையிலேயே சாகுபடியைமேற்கொண்டுவருகிறேன்.இதில் குண்டு மற்றும் நீண்ட காய் என இரண்டு வகையில் காய்கள் கிடைக்கும். எங்கள் கிராமத்தில் என்னைப் பார்த்து தற்போது 5 விவசாயிகள் கொய்யா சாகுபடிக்கு மாறியுள்ளார்கள். அதில் எல்லோரும் ஒரு ஏக்கர், அரை ஏக்கர் அளவிலே செய்து வருகிறோம். கொய்யா சாகுபடியைப் பொறுத்தவரையில் இதுவரை எனக்கு நஷ்டம் என்பதே ஏற்படவில்லை. முக்கியமாக, சாகுபடி செய்யும் காய்களை வியாபாரிகளிடம் தரமாட்டேன். நேரடியாக நானே விற்பனை செய்யறேன். சீசன் நேரங்களில் ஆட்டோவில் கொய்யாவை எடுத்துக்கிட்டு போய் ஒரத்தநாடு மற்றும் தஞ்சையில் உள்ள சாலை ஓரத்திலேயே கிலோ ரூ.60க்கு விற்றுவிடுவேன். நேரடியாக நானே விற்பதால் கிலோவிற்கு அதிகபட்சமாக எனக்கு ரூ.30 வரை லாபம் கிடைக்கும். அதுவும் ஒரு சில மாதங்களில் கொய்யா அதிகளவில் விற்பனையாகும்.

சராசரியா ஒரு மரத்துல இருந்து ஒரு போகத்திற்கு 25 கிலோ காய்கிடைக்கும். ஒரு கிலோ கொய்யா 35 லிருந்து அதிகபட்சமா 60 ரூபாய் வரைக்கும் கூட விற்பனையாகியிருக்கு. ஆடிமாதத்தில் கொய்யா அறுவடை துவங்கும். 100 நாள் காய்ப்பிற்குப் பிறகு 90 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு அறுவடை செய்வேன். நான் ஒரு கிலோ கொய்யா ரூ.50 என்ற கணக்கில் சராசரியாக விற்பனை செய்கிறேன். இதன்மூலம் எனக்கு ரூ.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.1 லட்சம் போக ஒரு ஆண்டிற்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கிறது. அரை ஏக்கரில் நிறைவான லாபம் கிடைப்பதால் தொடர்ந்து கொய்யா சாகுபடியை மட்டுமே செய்கிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
வெங்கடாசலம்: 96267 80940.

கொய்யா சாகுபடியில் கவாத்துப் பணி மிக முக்கியம். இதை வெங்கடாசலம் சரியாக கடைப்பிடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ காய்ப்பு முடிந்த உடன் காய்ந்தமற்றும் நோய் தாக்கிய கிளைகளையும், செடியின் அடிப்பாகத்தில் தோன்றும் கிளைகளையும் நீக்கிவிடுவேன். கிளைகளின் நுனிப் பகுதியிலிருந்து உள்நோக்கி 45 செ.மீ அளவில் கிளைகளை வெட்டி கவாத்து செய்வேன். கவாத்து செய்வதால் மரங்கள் குடைபோன்ற அமைப்பில் காணப்படும். ஆகையால் அதிக அளவு சூரியஒளி மற்றும் காற்று ஊடுருவிச் சென்று தழைத்து வரும் புதிய கிளைகளில் அதிக பூக்கள் தோன்றி காய்கள் பிடித்து மகசூல் அதிகரிக்கும்’’ என்கிறார்.

The post “நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’கொய்யாவால் குதூகலிக்கும் தஞ்சை விவசாயி! appeared first on Dinakaran.

Read Entire Article