சென்னை: திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில், தமிழகத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த இனிப்புகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று தமிழக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாட்டு எலும்புகளை உருக்கி, அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய்யைஉணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடாது. பாமோலின், விலங்குகளின் கொழுப்பு மூலம் தயாரிக்கப்பட்ட லட்டுகளின் சுவை, அசல் நெய்யில் செய்த லட்டின் சுவையில்இருந்து நிச்சயம் வேறுபட்டிருக்கும். அவற்றை நம்மால் சாப்பிட முடியாது. அதன் வாசனை, சாப்பிடும் முன்பே நமக்குத் தெரிந்துவிடும். மேலும், லட்டு போன்ற உணவுப் பொருட்களில் விலங்கு கொழுப்புகளை பயன்படுத்துவது என்பது மிகவும் சிரமமானது.