சென்னை: அமெரிக்காவில் ஃபோர்டு மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் உள்ளது. தமிழகத்தில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்க்க துறை சார்ந்த கொள்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.