சென்னை: தமிழகத்தில் பிஎச்.டி முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தேசிய தரவரிசையில் சிறந்த இடங்களை பிடித்த கல்வி மையங்களை கவுரவிக்கும் விதமாக 'தமிழகத்தின் உயர் கல்விச் சிறப்பு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
கருத்தரங்கில் என்ஐஆர்எஃப் தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முன்னிலை இடங்களைப் பெற்ற சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 11 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: ''தேசியளவிலான என்ஐஆர்எஃப் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வருவது மிகப் பெரிய சாதனையாகும். அதை செய்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். குறிப்பாக, நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது.