குன்னூர்: “தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்து கொண்டிருக்கிறது,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதை ஒட்டி, இந்தக் கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (செப்.10) வந்திருந்தார். அவருக்கு குன்னூர் நகர பாஜக செயலாளர் சரவணக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு அப்பகுதியில் மக்களைச் சந்தித்த எல்.முருகன் டிஜிட்டல் முறையில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.