சென்னை: தமிழகத்தில் சுமார் 30 சார் பதிவாளர்அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 500-க்கும்மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பதிவுசார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில சார்பதிவாளர் அலுவகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார்கள் சென்றன. தொடர்ச்சியாக வரப்பெற்ற புகார்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.