சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரோப்கார் இயங்கும் நேரம் அதிகரிப்பு: பக்தர்கள் அதிகளவில் வருவதால் ஏற்பாடு

2 days ago 4

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவதால், புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரோப்கார் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 1305 படிகள் கொண்டபெரியமலை மீது அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரோப்கார் சேவை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் 5 வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ரோப்கார் இயக்கப்படும். அதேபோல் அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசையையொட்டி அன்றைய தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ரோப்கார் இயக்கப்படும். மற்ற நாட்களில் வழக்கமான நேரங்களில் ரோப்கார் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரோப்கார் இயங்கும் நேரம் அதிகரிப்பு: பக்தர்கள் அதிகளவில் வருவதால் ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article